Monday, December 30, 2013

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

1.சுக்கு,மிளகு,திப்பிலி
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்...லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.



7.சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு
உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய்,பூசணிக்காய்
இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்
வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு
இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி
கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும். கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

நரம்பு தளர்ச்சி, முடக்குவாதம் போக சிறந்த மருந்து!


 
Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது. சில நாட்களுக்கு முன்பு கழுத்துவலிக்கு முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்த சொன்னோம். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை:
முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள "தாலைட்ஸ்" ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

என் இனிய பொன்னின்யின் செல்வாவின் மக்களுக்கு,

உங்கள் பாசத்திற்குரிய ஹரிஹர சுதன்னின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

ராஜா ராஜா சோழன்

ராஜ ராஜ சோழன்
இந்தியர்கள் குப்தர்களையும், விஜயநகர அரசர்களைப் பற்றிக் கற்குமளவுக்கு ராஜ ராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ கற்பதில்லை. இந்தியாவின் பெருமையாக ஈரானின் கட்டட காலையில் உருவான தாஜ்மகாலை கூறிக்கொள்ளும் நாம் இந்தியாவிலே உருவான தமிழர்களால் கட்டப்பட்ட கோவில்களை பற்றி மறந்தும் பேசுவதில்லை.ராஜ ராஜ சோழனை பற்றி கேட்ட நாள் முதல் அவனை பற்றி ஆராய வேண்டும் என்ற சிந்தை இருந்தது.ஆதலால் ஆங்கங்கே கிடைத்த தகவல்களை ஆராய்ந்து இணையத்தில் தமிழில் தொகுத்து தந்துள்ளேன் .. முதல் முயற்சி பிழை இருப்பின் பொறுத்தருள்க .


தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று ஆராயத்தக்கது. சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது

மிக பழமையானது சோழ ராஜ்யம். இதனை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகா கல்வெட்டிலும் கூட காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலக்கட்டதின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
சோழர்கள் காலத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்
1 சங்க கால சோழர்கள்
2 விஜயால சோழர்கள்
3 சாளுக்கிய சோழர்கள்
நாம் இங்கு காண இருப்பது விஜயால சோழர்களை பற்றி.. இவர்கள் காலத்தில்தான் சோழ சாம்ராஜ்யம் தன் கடற்படை வலிமை கொண்டு தெற்காசியா முழுவது பறந்து விரிந்திருந்தது. இந்திய வரலாற்றில் முதன் முதலாக கடல் கடந்து தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திய ஒரு ராஜ்யம் சோழ ராஜ்யம் தன்.இவர்கள் தம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து மதத்தையும்,திராவிட கலாச்சாரத்தையும் பரப்பினர்.
விசயாலய சோழன்
விசயாலய சோழன் (கி.பி. 850-880) என்ற மாவீரன் காலத்திலிருந்து சோழர் ஆட்சி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. விசயாலய சோழன் கி.பி 850இல் பல்லவருக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான்.விசயாலயசோழன் காலத்தில் பாண்டியர்களும், பல்லவர்களும் வலிமை பெற்று இருந்தனர்.இதே கால கட்டத்தில் சோழர்களைப்போன்றே முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம்வசப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தனர்.இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்டமுடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது.
திருப்புறம்பயம் போர்
சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடைபெற்றது.இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும் பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர்.அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின் மாதண்ட நாயக்கராக போரிட்டான்.அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.அங்கே போர் முகாமில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்டதோல்வியடைந்து சரணடையும் முடிவுக்கு வந்ததை கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90) இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார்.இதுகண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி வெற்றிபெற்றது.கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில்வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது.
முதலாம் ஆதித்தன்
மாவீரன் விசயாலய சோழன், சோழர்குலம் மீண்டும் சோழநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கு அடிக்கல் நாட்டினான்.விஜயால சோழன் பல்லவர்களை வெற்றி கொண்டு தஞ்சையை தலைமையிடமாக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தைய் நிறுவினான் .விஜயால சோழனுக்கு பின் அவனது மகனான ஆதித்ய சோழன் ஆட்சிக்கு வந்தான்.பிறகு ஒரு போரில் ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் அபராஜிதன் மீது முதலாம் ஆதித்தன் பாய்ந்து அவனைக் கொன்று தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான். இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும்.
முதலாம் பராந்தகன்
ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகன் ஆட்சி ஏற்றவுடன் பாண்டிய நாட்டை ஆண்ட இரண்டாம் இராசசிம்மன் உடன் போரிட்டான்.இப்போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் காசியப்பன் பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான்.போரில் பாண்டியர்களை வென்று தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால், இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்
தக்கோலப் போர்
முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்ததால் இராஷ்டிரகூடர்களின் வளர்ச்சி அதிகமாயிற்று.திருமுனைப்பாடியில் இக்காலத்திலேயே பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தன் தலைமையில் யானைப்படையும் சிறிய குதிரைப் படையும் அடங்கிய பெரும் படை ஒன்று இந்த இராஷ்டிரகூட படையெடுப்பு நிகழும் சாத்தியக்கூறுகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே காலத்தில், இதே பகுதியில் அரிகுலகேசரி என்ற பராந்தகனின் இரண்டாம் மகனும் தன் சகோதரன் இராஜாதித்தனுக்கு உறுதுணையாக இருந்தான். அப்போது இராட்டிரக்கூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.அரக்கோணத்திற்கு அருகில் உள்ளல் தக்கோலம் என்ற இடத்தில் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னர தேவனுக்கும் இராசாதித்தனுக்கும் கடும்போர் நடந்தது. மூன்றாம் கிருஷ்ணனுக்கு துணையாக கங்க மன்னன் பூதுகன் என்பன் போரிட்டான். இராசாதித்த சோழன் யானை மீது அமர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தபோது, பூதுகன் விடுத்த அம்பு ஒன்று சோழனின் மார்பை துளைத்துச் சென்றது. இராசாதித்தன் வீர மரணம் அடைந்தான். இதனால் சோழ படை தோல்வியுற்று தனது பகுதிகளை இழந்தது. ஏழத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் கீழ் தக்கோலம் இருந்தது.வடபகுதியில் பெற்ற தோல்வியின் பயனாக பராந்தகன் தன் நாட்டின் தென் பகுதியையும் இழந்தான்
கண்டராதித்த சோழன்
தக்கோலப்போரில் இராசாதித்த சோழன் மாண்டதால் முதலாம் பராந்தகன் தனது இரண்டாவது புதல்வனான கண்டராதித்தனை முடி சூடச் செய்தார் . கண்டராதித்தன் தான் பதவி ஏற்ற கொஞ்ச காலத்திலயே அரிஞ்சய சோழனை இளவரச பட்டமேற்கச் செய்தான்.அப்பொழுது கண்டரதித்தனுக்கு புதல்வர்கள் கிடையாது.கண்டராதித்தான் போர்களில் ஈடுபடுவதை காட்டிலும் கோவில் கட்டுவதிலயே அதிகம் ஈடுபாடு கொண்டார்.தொண்டை மண்டலம் தொடர்ந்து இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் கீழே இருந்தது.அதை மீட்பதற்கு சிறிது கூட முயலவில்லை என்றே கூற வேண்டும்.இக்காலகட்டத்தில் சோழ இராணுவம் வலிமை குறைந்து, கடல் வாணிபம் செழிப்புற்று விளங்கியது. சிதம்பரம் கோவிலில் உள்ள திருவிசைப்பா என்ற சைவ பாடலை பாடியவர் இவர்தான் என்று வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படுகிறது.
அரிஞ்சய சோழன்
அரிஞ்சய சோழன் முதலாம் இராசாதித்த சோழன், கண்டராதித்த சோழன் ஆகியோருடைய தம்பியாவான். வடக்கிலும்,தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன்,மிகக் குறுகிய காலமே ஆண்ட இவன் சோழ நாட்டின் வடக்குப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியில் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான்.
சுந்தர சோழன்
அரிஞ்சய சோழன் இறந்தவுடன் அவனது மகனான சுந்தர சோழன் பட்டமேற்றான். கண்டராதித்தன் மகனாகிய உத்தம சோழன் பட்டத்துக்கு உரிமை பெற்றவனாயினும் அவனது இளம் பிராயத்தை கருதி தனது மூத்த பேரனை சுந்தர சோழனை பட்டமேற்கச் செய்தான் முதலாம பராந்தகன் என்று கருத்து உண்டு.இரண்டாம் பராந்தக சோழன் என்று அழைக்கப்பட்ட சுந்தர சோழனக்கு ஆதித்ய கரிகாலன்,அருண் மொழி தேவன் , குந்தவை என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர் . இவன் ஆட்சிக்கு வந்த பொழுது தெற்கே பாண்டியர்களும் வடக்கில் இராஷ்டிரகூடர்களிடம் மிக வலுவாக இருந்தனர்.இவன் முதலில் உள்நாட்டு கலகக்காரர்களை அடக்கியத்துடன் பாண்டியர்களுக்கு உதவிய இலங்கை மன்னன் மகிந்தனை அடக்க கொடும்பாளூர் வேளாள இளையவர் தலைமையில் ஒரு படையை இலங்கைக்கு அனுப்பினான் . குறைந்த அளவு எண்ணிக்கை கொண்ட படையாலும், ஆயுத மற்றும் தானிய குறைபாடு காரணமாகவும் சோழ படைகளால் இலங்கை படையை வெல்ல முடியவில்லை .இப்போரில் கொடும்பாளூர் வேளாள இளையவர்போர்க்களத்தில் வீர மரணம் எய்தினார்.
சோழப் படைகள் இலங்கையில் தோல்வியுற்றவுடன் வீர பாண்டியன் மீண்டும்மறைந்து இருந்து தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தான்.ஆனால் இம்முறை சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலன் படை நடத்தி சென்றான். புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனும் வீர பாண்டியனும் நேருக்கு நேர் மோதினர்.இப்போரில் சுந்தர சோழன் யானைகளை கொன்று இரத்த ஆறை ஓட வைத்தான் என்றும், போரின் இறுதியில் வீர பாண்டியன் படைகள் தோல்வியுற்று வீர பாண்டியன் பக்கத்தில் உள்ள மலையில் சென்று ஓளிந்து கொண்டதாகவும் அவனை ஆதித்யன் தேடி சென்று தலையைக் கொய்ததாகவும் கருத்து உண்டு. அல்லது இவன் போர்க்களத்தில் கொல்லப்பட்டு இருக்கலாம் எப்படியும் "ஆதித்யன் வீரத்துடன் போரிட்டு ,வீர பாண்டியனை வென்று அவனுடைய தலையைக் கொய்ததாக" திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. இப்போரில் வென்றாலும் சுந்தர சோழனால் முழுமையாக பாண்டிய நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிய வில்லை.
இப்போர் முடிந்தவுடன் ஆதித்யன் வடக்கில் ஆக்கிரமித்து கொண்டிருந்த இராஷ்டிரகூடர்களிட போரில் ஈடுபட்டான் . இப்போரில் இவர்களால் இராஷ்டிரகூடர்களை முழுமையாக வடக்கிலிருந்து விரட்ட முடிந்தது.இலங்கை போரில் ஏற்ப்பட்ட தோல்வியை துடைக்க மீண்டும் இலங்கை மீது படை எடுக்க சுந்தர சோழன் தீர்மானித்தான்.ஆனால் இம்முறை யார் தலைமையில் படை நடத்தி செல்வது என்ற விவாதம் ஏற்ப்பட்டது.அப்போதுஆதித்ய கரிகாலன் இராஷ்டிரகூடர்களுடன் காஞ்சியை நிலைப்படுத்த தீவிரமான போரில் ஈடுப்பட்டிருந்தான்.இந்நிலையில் சுந்தர சோழனின் இளைய மகனான அருண் மொழி தேவன் (ராஜ ராஜான்) படைகளை நடத்த முன் வந்தான்.அப்போது அவனுக்கு வயது 19.
ஆதித்த கரிகாலன் கொலை
சுந்தர சோழன் தமது காலத்தில் உரிய பிராயத்தை எட்டியிருந்த கண்டராதித்தரின் புதல்வர் மதுராந்தகரை அடுத்த இளவரசராக அறிவிக்காமல் தனது தலைமகனான இரண்டாம் ஆதித்தரை இளவரசராகப் பட்டம் கட்டியது பல்வேறு மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்குமென்று தோன்றுகிறது. இதில் ஏதோ ஒரு வகையில் கடுமையான பாதிப்பையடைந்த உடையார்குடியின் கேரளத்து அந்தணர்கள் இரண்டாம் ஆதித்தரைக் கொலை செய்துவிட்டு மதுராந்தகர் உத்தமச் சோழர் என்கிற பெயரில் சோழசிம்மாதனமேற வழியேற்படுத்திக்கொடுத்தார்கள். இரண்டாம் ஆதித்தரின் தமையனான இளைஞர் அருள்மொழிவர்மர் தனது சிற்றப்பா மதுராந்தகர் சோழ மகுடத்தின் மீது ஈடுபாடு கொண்டிருக்கும் வரை அதனைத் தனது மனதினாலும் தீண்டுவதில்லையென்று திட்டவட்டமாக அறிவித்ததைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்துள்ளன .உத்தம சோழன் பதவி ஏற்றவுடன் அருண்மொழிவர்மனை இளவரசு பட்டமேற்கச் செய்தான் .
உத்தமச் சோழரின் காலத்தில் வம்ச வம்சமாகச் சோழருடன் பகை பூண்டிருந்த பாண்டியருடன் உத்தமச் சோழரும் அவரது சுற்றமும் நெருக்கமாக கைகோர்த்துக்கொண்டார்கள் என்பது குத்தாலக் கல்வெட்டால் விளங்குகிறது. சோழசாம்ராஜ்ஜியத்தை மேலைச்சாளுக்கிய மன்னரான சத்தியாச்ரயர் கி பி 980ல் தாக்கியபோது உத்தமச் சோழரால் அவரை வெற்றிகொள்ள இயலவில்லை. இத்தோல்வியின் முடிவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தபின் வேறு வழியின்றி உத்தமச் சோழர் விலகிக் கொள்ள கிபி 985ல் "இராஜராஜன்" என்னும் அபிஷேக நாமத்துடன் அருள்மொழிவர்மர் சோழசிங்கதானத்தில் அமர வழியேற்பட்டது.

போர்கள்
காந்தளூர்ச்சாலை கடிகை போர்
பட்டமேற்றவுடன் ராஜ ராஜன் செய்த முதல்காரியம் தனது தமையனார் ஆதித்த கரிகாலர் கொலையில் ஈடுபட்டிருந்த கூட்டத்தைக் கண்டுபிடித்து தண்டித்ததே ஆகும். சோமன் இவனது தம்பி ரவிதாசன், பரமேஸ்வரன், மலையுரன் மற்றும் இவர்களுக்கு பெண் கொடுதோர் பெண் எடுத்தோர் ஆகியோரை கட்டிய துணியோடு சோழ எல்லை தாண்டி சேர நாட்டுக்கு துரத்தி அடித்தான்.அந்தணர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை தரக் கூடாது என்று போதிக்கும் மனு தர்மத்துக்கு அடிபணிந்து அவர்களை உயிரோடு விட்டதாக கூறப்படுகிறது.
கேரளாவில் உள்ள காந்தளூர்ச்சாலை மீது போர் தொடுத்து பாஸ்கர ரவி வர்மனை தோற்கடித்தான்.காந்தளூர்சாலை கடிகை என்பது சேர,சோழ, பாண்டிய மன்னர்களிடையே புகழ்வாய்ந்த போர்முறைகளை, ஆயுதங்கள் பயிற்சியினை மற்றும் இன்னபிற தந்திரங்களை பயிற்றுவிக்கும் கல்லூரி போல திகழ்ந்து வந்தது.இங்கு தான் ஆதித்த கரிகாலனை கொல்ல சதி திட்டம் உருவானதாக கருதியதால் இக்கடிகை தகர்க்கப்பட்டது.
மலை நட்டு போர்
இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான்.இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.
ஈழப் போர்
பாண்டிய மணிமுடியை கைப்பற்றும் பொருட்டும் இலங்கையை முழுவதுமாக தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டும் ஈழப் போரை நடத்தினான். சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.இருப்பினும் இவனால் பாண்டிய மணிமுடியை கைப்பற்ற முடியவில்லை.இராஜேந்திர சோழன் காலத்திலயே மணிமுடியும் இலங்கையின் முழு கட்டுப்படும் சோழர் கைக்கு வந்தது.
வடக்கு போர்கள்
முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே பரவியிருந்தது. இராஷ்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராஷ்டிரகூடரின் இல்லாததால் இப்போர் மிக சுலபமாக வெற்றி அடைந்தது . அடுத்த நூற்றாண்டு முழுதும் இந்த பகுதி சோழர் வசமே இருந்தது.
மேலைச் சாளுக்கிய போர்
காங்கபடியையும் நுலம்பாடியையும் கைப்பற்றியவுடன் சோழர்களுக்கும் சாளுக்கியகளுக்கும் அடிக்கடி சிறு சிறு மோதல் ஏற்பட்டது . இருவரும் தக்க சமயத்தை எதிர்பார்த்து இருந்தனர் தங்களது பலத்தை நிருபிப்பதற்கு.எந்த சம்பவம் படையெடுப்பை தூண்டியது என்பது தெளிவாக தெரியவில்லை .கல்வெட்டுபடி கி.பி 1007 ல் இராஜராஜன் தலைமையில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் கொண்ட சோழ படை சாளுக்கியத்தை துவசம் செய்ததுடன் மிகப்பெரும் அழிவையும் ஏற்படுத்தி சென்றது.இப்போரில் சத்தியாசிரயனை வெற்றி கொண்டு அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் கொணர்ந்து பெரிய கோவில் கட்டுவதற்கு செலவழித்தான் இராஜராஜன்.
வேங்கிப் போர்
இராஜராஜன் கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடன் ஓர் இராணுவ உடன்படிக்கை செய்துகொண்டான். ஆனால் இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்த்த ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.
கலிங்க போர்
வேங்கிப் போர் முடிந்தவுடன் கலிங்கத்தின் (கலிங்கம் இன்றைய ஒரிசாவின் பகுதி) மீது படையெடுத்தான்.இராஜராஜன் தலைமையில் சென்ற படை கலிங்க அரசன் பீமனை முறியடித்து
மாலத்தீவு போர்
இராஜராஜனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை.
சோழ சாம்ராஜ்யம்
மதுரை
கங்கபாடி நுளம்பபாடி (தற்போதய மைசூர்)
கலிங்கா
வெங்கி
மாலத்தீவு
கடாரம் (தற்போதிய மலேசியாவில் உள்ள ஒரு தீவு )
மலாயா ( தற்போதிய தாய்லாந்து, பிலிபீன்ஸ், இந்தோனேசிய, மலேசியா, ப்ருனாய் மற்றும் சிங்கபூர் )
இலங்கை




தாய்லாந்தில் பாழடைந்து கிடக்கும் சோழர்களால் கட்டப்பட்ட பழங்கால இந்து ஆலயம்
நிர்வாகம்
இராணுவம்
கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின.
இவன் வலிமை மிக்க
காலால் படை
குதிரைப்படை
யானைப்படை (குஞ்சரமல்லர்)
கடற்படை
வில்லேந்திய வீரர்கள் ( வில் படை )
ஆகிய நான்கையும் கொண்டிருந்தான்.இவற்றின் எண்ணிக்கை தெளிவர தெரியவில்லை. காலால் படையில் ஏறக்குறைய பதினோரு லட்சம் பெரும் , யானைப்படையில் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் இருந்ததாக சீன குறிப்பு ஒன்றில் காணப்படுகிறது.இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது
தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் அரசு இயந்திரங்கள் சரிவர இயங்க ஆளுநர்களையும் ஏனைய அலுவலர்களையும் நியமித்தார்.அதேவேளை ஒவ்வொரு நாட்டிலும் அமைதி காக்கும் படை ஒன்றையும் விட்டுச் சென்றார். ஈழத்தில் அவர் விட்டு வைத்திருந்த வேளைக்காரர் படையின் எண்ணிக்கை 90,000 என்று தெரிகிறது. இப்படி ஒரு மாபெரும் சோழப்பேரரசை நிறுவ அவர் மேற்கொண்ட போர்களில் எல்லாம் அவர் பயன்படுத்திய சேனைகளின் எண்ணிக்கை பதினொரு லட்சத்திற்கும் மேலென்று கணக்கிட்டிருக்கிறார்கள். 31 படை பிரிவுகள் கொண்ட இத்தகைய அளவிலான சேனையைப் பராமரிப்பதற்கும், நிருவகித்து பயன்படுத்துவதற்கும் அசாத்திய திறமையும் நிருவாகத்திட்டமிடல் அறிவும் இருந்திருக்க வேண்டும்
நிலசீர்திருத்தம்
ராஜராஜன் தனது 16 வது ஆட்சி ஆண்டில் உலகின் வேறு எந்தப் பகுதியிலும், எந்த அரசனும் செய்யாத அளவில் அவருடைய பேரரசு முழுவதையுமே அளந்துள்ளார். பயிர் செய்யக்கூடியதும் முடியாததுமான எல்லா நிலங்களையும் அளந்து, வகைப்படுத்து கணக்கிட்டுத் தீர்வையும் நிர்ணயித்தது ஒரு மாபெரும் சாதனை. இக்கால நவீன அளவீட்டுக் கருவிகள் ஏதுமில்லாஅத நிலையில் வெறும் கயிறுகளைக் கொண்டு அளந்து ஓலைச்சுவடிகளில் குறித்துக்கொண்டு கணக்கிடுவது என்பது ஓர் அசுர சாதனை. அதுவும் மிகவும் துல்லியமாக (ஒரு வேலியின் 32ல் ஒரு பகுதியைக்கூட அளந்தார்கள்) அளவை செய்வது என்பது உலகையே அளப்பதற்கு ஒப்பாகும். இதனால் இவருக்கு “குரவன் உலகளந்தான்” என்றும் ஒரு பெயர் வந்தது.
சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது.10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்..
கிராமசபை
இராஜராஜனுடைய சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலிஎனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம்பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில்தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டுஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில்உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல்என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும்ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள்,ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன்வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள்என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.

பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம்என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.

சமூகம்

ராஜராஜனின் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.

பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர்.

தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.

அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.


சமயம்

ராஜராஜனின் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.

தஞ்சை கோவில்
தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் அல்லது விமானம் ஒரே கல்லால் கிட்டத்தட்ட 80 டன் எடை கொண்டது.(ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.) பக்கத்தில் மலையோ அல்லது பெரிய பாறையோ இல்லாத இடத்தில் எவ்வளவு பெரிய கல் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டது என்பது இன்னும் மர்மம் தான்.கோவிலை சுற்றிலும் சாய்வான மணல் மேடுகளை அமைத்து யானைகளின் மூலம் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.பாலகுமாரன் எழுதிய உடையார் புதினத்தில் இதை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது
.














தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள் கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949 -957) மனைவி செம்பியன்மா தேவியார்! பிறகே சோழமண்ணில் அற்புதமான கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத் தொட்டான் ராஜராஜசோழன்!
வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன் மற்றும் குணவான் மதுராந்தகன் - இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக் கட்டிய தலைமை அர்க்கிடேக்டோடுகள்! கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்ற கூற்று பொய் .கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! .கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது

தெனிந்திய அரசுகள் மற்றும் ராஜ ராஜ சோழனை பற்றிய ஒரு நிழற்படம்




கல்கியின் பொன்னியின் செல்வனின் புத்தகத்தில் வரையப்பட்டுள்ள குந்தவை மற்றும் நந்தினி படங்கள்.














கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்! )
சோழரின் 450 ஆண்டுகால புக்ழபெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்தில் தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் ராஜராஜன் என்ற அந்தப் பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சில நூற்றாண்டுகள் பயணம் செய்து, விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள் 1279ல் அழிந்து போனதோடு சோழரின் இனம் யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் புவியின் பரப்பிலிருந்தே மரைந்து போனது.ஆயினும் ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்

PEPPER / Milagu


வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு. மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.

மிளகில் உள்ள சத்துக்கள்:

தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு

வைட்டமின்கள்
1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்

சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

பற்களுக்கு:
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

தலைவலி:
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

இரத்தசோகைக்கு:
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.